கிளிநொச்சியில் அமையும் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையை அமைக்கும் பணிக்காகத் தற்போது கொரோனாத் தடுப்பு வைத்தியசாலைகளாக இயங்கும் வெலிக்கந்தை மற்றும் கரடியனாறு வைத்தியசாலைகளை மாவட்ட வைத்தியர்கள் குழு நேரில் சென்று ஆராய்ந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கிருஷ்ணபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நவம் அறிவுக்கூடமாக இயங்கிய கட்டடத்தில் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பிற மாவட்டங்களில் தற்போது இயங்கும் வைத்தியசாலைகளை நேரில் பார்வையிட்டு அதனை ஒத்த வசதி வாய்ப்புக்கள் மற்றும் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே நேற்று கிளிநொச்சியில் இருந்து நான்கு வைத்தியர்கள் குழாம் இந்தப் பயணத்தில் ஈடுபட்டது.
இவ்வாறு பயணித்த வைத்தியர்கள் பொலனறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு வைத்தியசாலைக்கும் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு அந்த வைத்தியசாலைகளில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு முறைமைகள் தொடர்பிலும் அறிந்துகொண்டனர்.
இதேநேரம் வெலிக்கந்தை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு ஒரு பகுதியில் இயங்குகின்ற போதும் ஏனைய பிரிவுகளும் வெளிநோயாளர் பிரிவும் உரிய பாதுகாப்பு முறைமையில் இயங்குகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி